| கடலூரை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 23). இவரது தம்பி பிரேம்குமார்(வயது 18). இருவரும் ஹுண்டாய் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் துரைப்பாக்கம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்த நண்பர்கள் ராஜசேகர்(வயது 26),சந்தோஷ்குமார்(22),வினோத்குமார்(21),விக்னேஷ்வரன்(20) ஆகியோருடன் மெரீனா கடற்கரைக்கு சென்றனர்.
அங்கு சுற்றி பார்த்து விட்டு உழைப்பாளர் சிலை அருகே கடலில் குளிக்க இறங்கினர். விக்னேஸ்வரனை தவிர மற்ற 5 பேரும் கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி நீரில் மூழ்கினார்கள். இதை பார்த்த பொது மக்களில் சிலர் அவர்களை காப்பாற்ற கடலில் இறங்கினார்கள். அவர்களால் வினோத்குமார், பிரேம்குமார் ஆகிய இரு வரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. ராஜசேகர், சந்தோஷ் குமார், பிரபாகரன் ஆகிய 3 பேரும் கடல் அலையில் சிக்கி பலியாகி விட்டனர். அவர்களது உடல்களை கண்டுபிடிக்க முடியாததால் அண்ணா சதுக்கம் போலீசில் வினோத்குமார் புகார் செய்தார். இதே சமயத்தில் வடபழனி பஜனை கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 18) என்பவரும் நண்பர்கள் 9 பேருடன் உழைப்பாளர் சிலை அருகே குளித்த போது கடல் அலையில் சிக்கி பரிதாபமாக இறந்து விட்டார். இவரது உடலும் கிடைக்காததால் அண்ணா சதுக்கம் போலீசில் புகார் செய்தனர். மீனவர்கள், தீயணைப்பு படையினர் உதவியுடன் 4 பேரையும் போலீசார் கடலில் தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இன்று கடற்படை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி நடந்தது. |
|
Thanks India Tamil News |