கடலூர் மாவட்டத்தில் சிறுபான்மை இன பள்ளி மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என கலெக்டர் ராஜேந்திரரத்னூ கூறியுள்ளார்.
கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கல்வி உதவித்தொகை
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், ஐ.டி.ஐ. மற்றும் ஐ.டி.சி. தொழிற்பயிற்சி கல்வி நிறுவனங்களில் 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்புவரை (என்.சி.வி.டி. படிப்புகள் உள்பட) படிக்கும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு (முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் மற்றும் புத்தமதத்தினர்) பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை நடப்பாண்டில் (2008-09) வழங்க மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தில் 2007-2008-ம் ஆண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை பெற்றவர்கள் தொடர்ந்து கல்வி படிக்கும் பட்சத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பள்ளி மேற் படிப்பு (புதுப்பித்தல்) கல்வி உதவிதொகை பெறலாம்.
தகுதிகள்
கடந்த ஆண்டு பள்ளி, கல்லூரி அல்லது தொழிற்பயிற்சி இறுதி தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். சிறுபான்மையினத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் கல்வி நிறுவனங்களுக்கு வருகை கல்வித்துறையின் வரையறைகளை பின்பற்றி இருக்க வேண்டும். இதை அந்தந்த கல்வி நிறுவனங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
கல்வி உதவிதொகையில் சேர்க்கை மற்றும் படிப்பு(கற்பிப்புக்) கட்டணம் ஆகியவை வழங்கப்படும். படிக்கும் வகுப்புகளுக்கு ஏற்ப ரூ.3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். விடுதியில் சேர்ந்து படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் படிக்கும் வகுப்பை பொறுத்து பராமரிப்புக் கட்டணம் மாதம் ரூ.325 முதல் 510 வரை வழங்கப்படும். விடுதியில் தங்கி படிக்காதவர்களுக்கு மாதம் ரூ.140 முதல் 330 வரை அதிகபட்சமாக 10 மாதங்களுக்கு மட்டும் வழங்கப்படும்.
விண்ணப்பபடிவம்
வருவாய் துறையின் துணை வட்டாட்சியர் அந்தஸ்துக்கு குறையாதவரிடம் இருந்து ஜாதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மத்திய, மாநில, தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் சுய தொழில் செய்யும் பெற்றோர்களின் ஆண்டுவருமானம் (அனைத்து வழிகளிலும்) குறித்த விவரங்களை உறுதி ஆவணம் படிவத்தில் ரூ.10 மதிப்புள்ள நீதிமன்றம் சாரா முத்திரைத்தாளில் சுய கையொப்பமிட்டு வழங்கிட வேண்டும். முந்தைய ஆண்டின் இறுதி தேர்வின் மதிப்பெண் பட்டியலையும் இணைக்க வேண்டும்.
சிறுபான்மையினத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அனைத்து ஆவணங்களுடனும் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு புதுப்பித்தலுக்கு வருகிற 10-ந் தேதிக்குள்ளும், புதிதாக விண்ணப்பிப்பவர்கள் 31-ந் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்
மாணவ, மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சரிபார்த்து மாணவ, மாணவிகளின் பட்டியலை வகுப்பு வாரியாக பரிந்துரைக்கப்பட வேண்டிய படிவத்தில் மட்டும் பூர்த்தி செய்தும் குறுந்தகட்டில் (ஏரியல் பாயின்ட்) பதிவு செய்து புதுப்பித்தலுக்கு வருகிற 20-ந் தேதிக்குள்ளாகவும், புதியதுக்கு செப்டம்பர் 10-ந் தேதிக்குள்ளாகவும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இக்கல்வி உதவி தொகை தொடர்பான அனைத்து விவரங்கள், விண்ணப்ப படிவங்கள், கல்வி நிறுவனங்களால் பரிந்துரைக்கப்படவேண்டிய படிவங்கள் என்ற இணைய தள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மேற்படி கல்வி உதவிதொகையை பெற்று சிறப்பாக கல்வி பயிலுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.